படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளுக்கு நியாயமான மற்றும் நடுநிலையான விசாரணைகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (31) ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கெளசல்யா அரியரத்ன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இப்போராட்டம் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் பிரதி அமைச்சரின் பங்கேற்புடன் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு தொடங்குவதற்குச் சற்று முன்னதாகவே இப்போராட்டம் நடத்தப்பட்டது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடூரச் செயல்களுக்குப் முறையான விசாரணைகளை வலியுறுத்தி நீதி கோரிய ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாண ஊடக அமையத்தின் (Jaffna Press Club) சார்பில் பிரதி அமைச்சர் பங்கேற்ற இந்நிகழ்வை முழுமையாகப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.






