• Home
  • உள்ளூர் செய்திகள்
  • நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கோலாகலம்-அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கோலாகலம்-அம்பாறை மாவட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

பொலிஸ் பாதுகாப்புடன் அமைதியான முறையில் ஆரம்பமானது பரீட்சை

பாறுக் ஷிஹான்

இலங்கை முழுவதும் தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை நாடு தழுவிய ரீதியில் அமைதியாகவும், சுமுகமான முறையிலும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பரீட்சைக்குத் தோற்றி வருகின்றனர். வினாத்தாள்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் எவ்வித பதற்றமுமின்றி நம்பிக்கையுடன் பரீட்சை எழுதுவதை அவதானிக்க முடிந்தது.

பரீட்சை நடவடிக்கைகளை எவ்வித இடையூறுகளுமின்றி மிகவும் நேர்த்தியாக நடத்துவதற்காக, நாட்டின் அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகளின் போக்குவரத்துச் சௌகரியங்கள் மற்றும் நிலையங்களின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில் பொலிஸார் தீவிரக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.பரீட்சை காலை 09.30 மணிக்கு ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு சமூகமளித்திருந்தனர்.

மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது பரீட்சையை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைபெறுவதற்கு பெற்றேர்கள் உள்ளிட்ட தரப்பினர்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

அத்துடன், பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மற்றும் கல்வி அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தங்குதடையின்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்துகிறது.

இதற்கமைய, காலை 9.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், அனைத்து மாணவர்களும் காலை 09.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார்.

முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது.

பின்னர் வழங்கப்படும் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.

பரீட்சைக்குத் தோற்றும் அனைத்துப் பிள்ளைகளும் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்றாக வாசித்து, தங்களது பரீட்சை இலக்கத்தை சரியாகக் குறிப்பிட்டு, தெளிவான கையெழுத்தில் வினாத்தாளிலேயே விடையளிக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கைபேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது ஏனைய இலத்திரனியல் சாதனங்கள் எதனையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வதைத் தவிர்க்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

Share the Post: