டில்வின் சில்வாவின் கருத்தை CAFFE அமைப்பு கண்டனம் செய்கிறது.

ஹஸ்பர் ஏ.எச்

2017 முதல் இதுவரை மூன்று ஜனாதிபதிகளின் கீழ் — நல்லாட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷ, பின்னர் இடைக்கால அரசில் ரணில் விக்கிரமசிங்க — இம்மூவரும் மாகாண சபைத் தேர்தல் குறித்து முடிவெடுத்து அதை சரியான நேரத்தில் நடத்த முடியவில்லை என்று CAFFE அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (27)வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் 

மேலும், தற்போதைய அரசும் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக மாகாண சபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதாக கூறியிருந்தது. அவர்களின் கொள்கைப் பிரகடனத்தில், ஆட்சி அமைந்த ஒரு ஆண்டுக்குள் தேர்தலை நடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், ஜனாதிபதி வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் போது 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால் தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, “இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது; அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் சமீபத்திய டிட்வா பேரழிவுக்காக பயன்படுத்தப்பட்டது” என்று கூறுகிறார். மக்களாட்சிசார் அரசு என தங்களை கூறிக்கொண்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை இவ்வளவு எளிதாக மாற்றுவது பொருத்தமற்றது என்று நிறைவேற்று பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.

“2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணம் இல்லை என்று கூறி ஒத்திவைத்தார். பணம் இருந்தால் தேர்தலை நடத்தலாம் என்றும் அவர் கூறினார். அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தற்போதைய அரசு அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, அது ஜனநாயக விரோதமானது என்று கூறியது. ஆனால் இப்போது தற்போதைய அரசும் அதே செயலைத்தான் செய்கிறது. நாடாளுமன்றத்தில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறி, பின்னர் அந்த பணம் வேறு ஒன்றுக்கு செலவிடப்பட்டது என்று சொல்வது ஜனநாயக விரோதமான செயல் என்பதை ஜனாதிபதி உட்பட தற்போதைய அரசுக்கு வலியுறுத்த விரும்புகிறோம்.

“மாகாண சபை முறைமையை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்தும் தற்போது பலரிடையே பேசப்படுகிறது. ஆகையால், இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், அதற்குப் பதிலாக வேறு ஒரு முறைமையை முன்வைக்க விரும்பினால் — அதாவது மாகாண சபைகளை ரத்து செய்து மாற்று தீர்வொன்றை கொண்டு வர விரும்பினால் — அதை உடனடியாக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

“தேர்தல் அமைப்பில் மாகாண சபைத் தேர்தல் இருப்பதால், அதை விரைவாக நடத்த வேண்டும். இல்லையெனில், ஒரு நாளுக்குக் கூட அதை ஒத்திவைத்தால், அந்த அரசு ஜனநாயகத்தை மதிக்காத அரசாக உலகளவில் கருதப்படும். இதுகுறித்து திறந்த கலந்துரையாடல் நடத்தப்பட வேண்டும். கலந்துரையாடல் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடாகும்,” என்று CAFFE அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார்.

Share the Post: