நிதித்தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதாரகம முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இரு தனியார் வங்கிக் கணக்குகளைப் பரிசோதித்துத் தகவல்களைப் பெற வேண்டியுள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான், வங்கி கணக்குகளைப் பரிசோதிக்க அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான விரிவான அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.
அதற்கமைய, வழக்கு விசாரணைகளும் அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டன.




