மண்முனை மேற்கு, ஆகஸ்ட் 28: மண்முனை மேற்கு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைகள்தொடர்பில் மண்முனை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
மண்முனை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் (28.08.2026) நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்
தலைவருமான க. பிரபு அவர்களின் தலைமையில், பிரதேச செயலாளரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளருக்கு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படாதது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர், பிரதேசசபையின் உப தவிசாளர் உடனடியாகக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பெற்றுக்கொடுத்தார்.
அத்துடன், தாண்டியடி கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட குறிஞ்சாக்கேணி குளத்தின் புனரமைப்பு தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாகக்
கலந்துரையாடப்பட்டது. குளத்தை மண்ணகழ்வு செய்து புனரமைப்பதுடன், அதன் மூலம் கிடைக்கும் வளத்தை மண்முனை மேற்கு பிரதேச சபைக்கும் பகுதியளவில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தினார்.
இதன்போது, மண்முனை மேற்கு பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பிலும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக, பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள், கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி, பொதுப் போக்குவரத்து, பேருந்து சேவைகள், காணி விவகாரங்கள்,
உப அஞ்சல் அலுவலகங்களின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் முன்னெடுக்க வேண்டிய
நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், மக்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் இராசமாணிக்கம், ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் த. கோபாலபிள்ளை, உப தவிசாளர் டிசாந், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கலந்துகொண்ட பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களையும், மண்முனை மேற்கு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான பரிந்துரைகளையும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் முன்வைத்தனர்.







