போதைப்பொருள் சுற்றிவளைப்பு-ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

பாறுக் ஷிஹான்

  நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்  3,820 மில்லிகிராம்  ‘ஐஸ்’   போதைப்பொருளுடன் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு ஏற்ப நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்புகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.பி.வி.  கஸ்தூரி ஆராய்ச்சி  வழிகாட்டலிலும்  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ. இப்னு அஸார்   நெறிப்படுத்தலில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட புலனாய்வு அதிகாரி ஏ.ஆர்.எம். பிர்தௌஸ் வழங்கிய  இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில்  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.பிரகலாதன்  தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, சந்தேகநபரின் வீட்டை முற்றுகையிட்டு பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின் போதே, மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சாய்ந்தமருது பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share the Post: