நீண்டகால ஹெரோயின் வியாபாரிகள் இருவர் கைது

இலத்திரனியல் தராசுடன் ஹெரோயின் பறிமுதல் – பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபரும் சிக்கினார்

பாறுக் ஷிஹான்

நீண்டகாலமாகச் சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்கள் திங்கட்கிழமை (10) மாலை சாய்ந்தமருது பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஏ.ஆர். பிர்தௌவ்ஸிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே கல்முனைக்குடி மற்றும் சாய்ந்தமருது பகுதிகளைச் சேர்ந்த 30 மற்றும் 44 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது   செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2,400 மில்லிகிராம் மற்றும் 2,970 மில்லிகிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருட்களுடன், போதைப்பொருளை நிறுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மைக்ரோ ரக நவீன இலத்திரனியல் தராசு ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல அவர்களின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சி அவர்களின் ஆலோசனையிலும், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் நெறிப்படுத்தலிலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ். இந்திக தலைமையிலான பொலிஸ் சார்ஜன்ட்களான ஜெயசிங்க (63373), அத்துவர் (91775) மற்றும் பொலிஸ் உதவியாளர் ரசூல் அடங்கிய குழுவினர் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

அத்துடன்  இக்கைது நடவடிக்கையின் போது கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேகநபர்கள் இருவரையும் சான்றுப் பொருட்களுடன் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Share the Post: