கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை உத்தியோகத்தர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகள் குறித்து விசேட பயிற்சி அளிப்பு
பாறுக் ஷிஹான்
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொடர்பான விசேட பயிற்சி நிகழ்வு நேற்றைய தினம் (10) நடைபெற்றது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படைகள், அதன் நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் நவீன AI கருவிகளை அன்றாட நிர்வாகப் பணிகளில் திறம்பட பயன்படுத்தும் முறைகள் தொடர்பாக விரிவான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் டிஜிட்டல் திறன்களை (Digital Skills) காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துதல், பணித்திறனை அதிகரித்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மருத்துவமனை நிர்வாகத்தில் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதற்கான அறிவை வழங்குதல் ஆகிய பிரதான நோக்கங்களுடன் இப்பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது ‘நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்குவதன் மூலமே சுகாதார சேவையின் வேகத்தையும் தரத்தையும் மேலும் உயர்த்த முடியும் என வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம் றிபாஸ் குறிப்பிட்டார்.
இப்பயிற்சி நிகழ்வில் வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவின் நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பான செய்முறைப் பயிற்சிகளையும் அறிவையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.







