கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி

மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால் சுற்றுச்சூழல் மாசடைந்து, பாரிய சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் நிலவுவதாகப் பிரதேச மக்கள் கவலை வெளியிடுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் கழிவுகள் தேங்கி நிற்பதால், கொசுப் பெருக்கம் அதிகரித்துத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், பாதையோரங்களில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் பாதசாரிகள் பாதுகாப்பாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்திற்கும் பெரும் இடையூறுகள் ஏற்படுகின்றன.

இந்நிலைமை தொடர்பில் கல்முனை மாநகர சபையோ அல்லது சம்பந்தப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்களோ (PHI) இதுவரை எவ்வித உரிய கவனமும் செலுத்தவில்லை எனப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் குறித்த பகுதியில் குவிந்துள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும், சீரான கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share the Post:

Related Posts