பெண்களின் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், ‘அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன்’ அனுசரணையில் நடாத்தப்பட்ட தொழிற்பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்த பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்றைய தினம் (01.08.2026) மட்டக்களப்பு, கல்லடி கிறீன் கார்டன் ஹோட்டலில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
மேலும், இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், அபிவிருத்தி உத்தியோகத்தர் லோ.திபாகரன், அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கோடு, இத்தகைய பயனுள்ள தொழிற்பயிற்சிப் பாடநெறிகள் அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் மூலம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







