• Home
  • உள்ளூர் செய்திகள்
  • களுவாஞ்சிகுடி பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த பலசரக்குக்கடைக்கு நீதிமன்ற உத்தரவின் பெயரில் பூட்டு.

களுவாஞ்சிகுடி பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த பலசரக்குக்கடைக்கு நீதிமன்ற உத்தரவின் பெயரில் பூட்டு.

களுவாஞ்சிகுடி பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் பொது சுகாதார பரிசோதகர் த.கஜனன் மற்றும் மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினரால் செவ்வாய்கிழமை(18.08.2026)  பலசரக்குக் கடைகள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்கள் என்பன திடீர் பரிசோதனைகளுக்குட்பட்டன.

இதன்போது களுவாஞ்சிகுடியில் பல சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த பலசரக்குக் கடை ஒன்று இனம்காணப்பட்டு அக்கடை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சுகாதாரப் பரிசோதகர்களால் முத்திரையிடப்பட்டு பூட்டப்பட்டது.

குறித்த பலசரக்குக் கடை மிகமோசமான நிலையில் சுகாதார சீர்கேடுகள் நிலவியிருந்த நிலையிலேயே சுகாதாரப் பரிசோதகர்களின் திடீர் பரிசோதனையின்போது இது கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த பலசரக்குக் கடையின் உரிமையாளருக்கு எதிராக வழங்குத்தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடைஉரிமையாளருக்கு மூன்று இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டதுடன்,  குறித்த பலசரக்குக் கடையில் காணப்படும் அனைத்துவித சுகாதார குறைபாடுகளையும் பூர்த்தி செய்யப்படும்வரையில் கடையை மூடுமாறும் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி நகரில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பொதுச்சந்தை, பலசரக்குக் கடைகள் போன்றன சுகாதாரப் பரிசோதகர்களால் பரிசோதனைக்குட்பட்டுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: