பாடசாலை மாணவர்களின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேணும்போது அவர்களுக்கு எவ்விதமான உடல் அல்லது உள ரீதியான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பொன்றை மேற்கோள்காட்டி இந்த புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாகாண கல்விச் செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு இந்த அறிவுறுத்தல்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டல்களின் முக்கிய அம்சங்கள்:
தண்டனைகளுக்குத் தடை: எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகளை (Corporal Punishment) வழங்க முடியாது.
உடல் ரீதியான பாதிப்புகள் மட்டுமன்றி, மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் வகையிலான உளவியல் ரீதியான தண்டனைகளும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த உத்தரவுகளை மீறி மாணவர்களுக்குத் தண்டனை வழங்கும் ஆசிரியர்கள் அல்லது அதிகாரிகள் அதற்குரிய சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுக்கக் கட்டுப்பாடு தொடர்பான சுற்றுநிரூபத்திற்கு மேலதிகமாகவே இந்த புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படும்.
பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கத்தை நிலைநாட்டும்போது மிகவும் நிதானமாகவும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களைப் பின்பற்றியும் செயற்படுமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.




